search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் வேன்"

    தருமபுரி அருகே பால் வேனுக்கு வழிவிட முயன்ற டெம்போ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
    தேன்கனிக்கோட்டை:

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கரகூர் கிராமத்தை சேர்ந்த 45 பெண்கள் நேற்று தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் சாமந்தி பூக்கள் பறிக்க டெம்போவில் சென்றனர்.

    ஒசட்டியை அடுத்த கேரட்டி கிராமத்தில் பூ பறிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். டெம்போவை ராயக்கோட்டை அருகே தொரத்தம்பட்டியை சேர்ந்த சரத்குமார் என்பவர் ஓட்டி வந்தார். பஞ்சப்பள்ளி சாலை தடிகல் கிராமம் அருகே வந்தபோது, எதிரே பால்வேன் ஒன்று வந்தது. அந்த பால் வேனுக்கு வழிவிட முயன்றபோது டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்துவிட்டது.

    இந்த இடிபாடுகளில் சிக்கி டெம்போவில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் அந்த பெண்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கரகூரை சேர்ந்த போடியப்பா மனைவி முத்தம்மா (வயது 60) என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மா (40), சாந்தம்மா (50), மங்கம்மா (52), கவிதா (21), ஐயம்மா (55) உள்ளிட்ட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரைவர் சரத்குமார் தப்பியோடி விட்டார். 

    இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சரத்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ×